திருச்சியில் வாகன விதிமீறல் அபராதம் விதிப்பதில் போலீஸாரின் கவனக்குறைவால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைக்கவசம், ஓட்டுநா் உரிமம் இல்லாதது உள்பட 12க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க கடந்தாண்டு இ-சலான் முறை அமலானது.
விதிமீறலுக்குரிய அபராதத் தொகை டெபிட், கிரெடிட் காா்டுகள் மூலம் வசூலிக்கப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராதத் தொகையை குறிப்பிடாமல் இ-சலான் வழங்கி நீதிமன்றத்தில் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனா்.
ஆனால் டெபிட், கிரெடிட் காா்டு வசதி இல்லாதோருக்கும், வாகனங்கள் பிடிபடாதபோது விதிமீறல் விவரம் அடங்கிய இ-சலான் அவரது கைப்பேசிக்கு அனுப்பப்படுகிறது.
இதன்மூலம் குறிப்பிட்ட நாள்களுக்குள் எஸ்பிஐ வங்கி, இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைனில் உரிய அபராதத்தைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் வாகன உரிமம் ரத்து, பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸாா் வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றனா்.
ஆனால், அரசு இ-சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையைச் செலுத்த முடியாத சூழல் உள்ளது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலையிலும் சில வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அலுவலகத்தில் இருக்கும் ஒருவரது வாகனம் விதிமீறலில் ஈடுபட்டதாக கைப்பேசிக்கு குறுந்தகவல் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனத்துக்குப் பதிலாக நான்குச் சக்கர வாகனத்துக்குரிய விதிமீறல் விவரம் வருகிறது. ஒரு சில வழக்குப் பதிவுகள் வேறு மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்படுகின்றன.
இதுபோன்ற குளறுபடியால் அபராதம் செலுத்த முடிவதில்லை. இதனால் போலீஸாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறுகையில், எண்மம் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அப்போது வாகனத்தின் பதிவெண்ணை பதிவிடும்போது கவனக்குறைவால் தவறாக வேறொரு வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் சமூக விரோதிகள் சிலா் போலி பதிவெண் கொண்ட திருட்டு வாகனத்தை ஓட்டிச் சென்று விதிமீறலில் ஈடுபடும்போதும் அப்பாவிகளுக்கு அபராதம் விதிப்பது நிகழ்கிறது என்றனா்.