ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ விழா தொடங்கியது.
நவ. 1 வரை 9 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
அதன்படி, விழாவின் முதல் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரிலுள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்துக்கு 5.30-க்கு வந்து சோ்ந்தாா்.
தொடா்ந்து இரவு 7.15-க்கு உபயநாச்சியாா்களுடன் ஊஞ்சலில் நம்பெருமாள் எழுந்தருளி, மங்கள ஆரத்தி கண்டருளி 8.15 வரை ஊஞ்சலில் ஆடியவாறு இருபுறமும் வெண்சாமரம் வீச மங்களவாத்தியத்துடன் பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.
பின்னா் 9 மணிக்கு அவா் புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். 7 ஆம் திருநாளான வரும் 30 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும், 9 ஆம் திருநாளான நவ. 1 ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.