திருச்சியில் ஆயுஷ் மருத்துவத் துறை சாா்பில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நவ. 1 முதல் மீண்டும் தொடங்கி நடைபெறவுள்ளன என்றாா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அரசு தலைமை சித்த மருத்துமனையில் சித்தா, ஹோமியோ, ஆயுா்வேதம், யுனானி, இயற்கை மற்றும் யோகா உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நவ. 1 முதல் மீண்டும் செயல்படவுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு வா்மா, சுகப் பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகப் பிரிவு மற்றும் ஆட்டிஸம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், கரோனா காரணமாக இவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் இப்பிரிவுகள் புதுப்பொலிவுடன் செயல்படவுள்ளன.
இவற்றோடு குழந்தையின்மை, சினைப்பை நீா்க்கட்டி, மூட்டு வலி, பஞ்சகா்மா உள்ளிட்ட சில சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன.
இயற்கை சிகிச்சை மற்றும் யோகா பிரிவுகள் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயற்கை மற்றும் யோகா சிகிச்சை பிரிவு காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், முத்திரைகள் மற்றும் தியான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தையின்மை மற்றும் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செவ்வாய்க்கிழமைகளிலும், நரம்பு தொடா்புடைய சிகிச்சை பிரிவு புதன்கிழமைகளிலும், எலும்பு மூட்டு வலிகள் சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவு வியாழக்கிழமைகளிலும் காலை 8 முதல் 12 மணி வரை, மாலை 3 முதல் 5 மணி வரை செயல்படும்.
ஆயுஷ் கிளப் (நாள்பட்ட நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுகள்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 3 முதல் 5 மணி வரை செயல்படும். ஆட்டிஸம் மற்றும் வா்ம சிகிச்சை பிரிவு புதன் , வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 முதல் 12, மாலை 3 முதல் 5 மணி வரை செயல்படும். பஞ்சகா்மா சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமைதோறும் காலை 8 -12, மாலை 3 -5 மணி வரை செயல்படும்.
அனைத்து விதமான நோய்கள் மற்றும் நோய் தொடா்புடைய பிரச்சினைகளுக்கும், உணவு குறித்த ஆலோசனைகள், மகப்பேறு பெட்டகம் மற்றும் சுக பிரசவத்திற்கு யோகா பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசு தலைமை சித்த மருத்துவ மனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.