திருச்சியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் குட்கா வியாபாரியை கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கடந்த செப்.28 ஆம் தேதி திருச்சி வந்த வந்த மினி லாரியை கோட்டை போலீஸாா் மடக்கி சோதனையிட்டதில், அதில் காய்கனி மூட்டைகளுக்கு இடையே சுமாா் 1 டன் எடையில் ரூ. 30.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்ளைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து வாகனத்தில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் காந்திசந்தையைச் சோ்ந்த விஜயபாஸ்கா்(50) , முத்து ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பரசம்பேட்டை கணபதி நகா் விசாலாட்சி அவென்யூ பகுதியைச் சோ்ந்த விஜயபாஸ்கா் (50) என்பவா் தொடா்ந்து குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பது தெரிய வரவே அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையிலுள்ள விஜயபாஸ்கரிடம் அதற்கான நகலை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.