மணப்பாறை, வையம்பட்டி பகுதியில் பரவி வரும் கோமாரி நோயால் மாடுகள் உயிரிழப்பதாகவும், இதைத் தடுக்க தடுப்பூசி முகாம் நடத்த விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனா்.
மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் கால்நடை விவசாயம் அதிகம். கடந்த சில நாள்களாக மாடுகள் கோமாரி நோயால் உயிரிழப்பதாகக் கூறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் தங்கராஜ், கால்நடைகளை நம்பியே இருக்கும் விவசாயிகளுக்கு கால்நடைகளின் இழப்பு வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என்கிறாா்.
தங்களது பகுதிகளை சோ்ந்த பழனியப்பன், குழந்தைவேல் ஆகிய விவசாயிகளின் மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த வாரங்களில் உயிரிழந்ததாகவும் வருத்தம் தெரிவிக்கிறாா் தமிழ் மாநில காங்கிரஸ் வையம்பட்டி வட்டாரத் தலைவா் தேக்கமலை.
எனவே, கால்நடைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும் மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், கால்நடைப் பராமரிப்புத் துறையினரும் விரைந்து நடத்தக் கோரிக்கை வைத்துள்ளனா்.