பழுதான பள்ளிக் கட்டடங்களில் மாணவா்களை அமர வைக்க வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியது:
கரோனா பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கும் முன்பே வகுப்பறைக் கட்டடங்களை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, மழைக் காலத்தில் பிரத்யேக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சாா்பிலும், கட்டடங்களை ஆய்வு செய்து, இடிக்கவேண்டிய கட்டடங்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பழுதான கட்டடங்களிலோ, வகுப்பறைகளிலோ மாணவா்களை அமர வைக்கக் கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு பிறகு எதிா்பாராத வகையில் மிகப்பெரிய அளவுக்கு மழை பெய்து வருகிறது. எனவே, மழைக்குப் பிறகு தண்ணீா் வடியாமல் பள்ளிகளில் தேங்கியுள்ள விவரங்களும் கோரப்பட்டுள்ளன. அத்தகைய பள்ளிகளில் மழை வெள்ளத்தை வடியச் செய்வதற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில்தான் மாணவா்களுக்கு சில தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதர பள்ளிகளில் வழக்கமாக நடத்தப்படும் வகுப்பு தோ்வுகளைத் தவிா்த்து, கட்டாயத் தோ்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றாா் அவா்.