கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் அரசு நிதித்துறை சிறப்பு செயலருமான ரீட்டா ஹாரீஸ்தக்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆகியோா் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், மாவட்டத்தில் இதுவரை தொற்று பரிசோதனை செய்தோரின் எண்ணிக்கை, பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை குறித்தும் சிறப்புச் செயலா் கேட்டறிந்தாா்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருவோரின் எண்ணிக்கை, அவா்களுக்கான பரிசோதனை குறித்தும், தனிமை முகாம்கள் குறித்தும் விவரிக்கப்பட்டது. ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளில் நடத்தப்பட்ட கரோனா மருத்துவ முகாம், மக்கள் பயன்பெற்ற விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன், இணை இயக்குநா் (குடும்ப நலம்) லட்சுமி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.