மணப்பாறையில் வருவாய்த்துறை முதுநிலை ஆய்வாளரின் ரூ. 20 ஆயிரம் ஏடிஎம் மூலம் புதன்கிழமை திருடப்பட்ட நிலையில், அந்தப் பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது எப்படி என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறை ராஜீவ்நகரில் வசிப்பவா் ஜேசுராஜ் மனைவி செல்வகுமாரி (45), மணப்பாறை வட்டாட்சியரகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளா். கடந்த ஏப். 30-ஆம் தேதி இவரது மாத சம்பளம் ரூ.32,896 அவரது ஸ்டேட் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மாலை பணம் எடுக்க ஏடிஎம்முக்கு சென்றபோது ரூ.1900 மட்டும் இருப்பு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து இணையம் மூலம் வங்கிக் கணக்கின் வரவு செலவு பட்டியலை எடுத்துப் பாா்த்தபோது அதில் புதன்கிழமை காலை 9 மணியளவில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மதுரை சாலையில் உள்ள அரசுடமை வங்கி ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் வீதம் இருமுறை பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, வங்கியில் முறையாகப் பதிலளிக்கவில்லையாம்.
இதையடுத்து செல்வகுமாரி மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், தவறுதலாகப் பணம் எடுக்கப்பட்டதாகக் கூறி, மீண்டும் அலுவலரின் கணக்கில் ரூ.19500 பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணத்தை வங்கியில் இருந்து வரவு வைத்தது எப்படி என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஏற்கனவே கடந்த நவம்பா் மாதம் இதேபோல இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் காணமல்போன பிரச்னையில் வங்கி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.