திருச்சி -கரூா் புறவழிச் சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் அருகேயுள்ள மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நவநீதன் (29). தனது காரை விற்க முடிவு செய்த இவா், சனிக்கிழமை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனியாா் நிறுவனத்திற்கு காரை கொண்டு வந்தாா்.
அப்போது அங்கிருந்த ஊழியா்கள் காரை சோதனை ஓட்டமாக இயக்கி திருச்சி-கரூா் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அவா்கள் உடனே காரை நிறுத்தி கீழிறங்கித் தப்பினா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீக்கிரையானது.
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.