திருச்சி: திருச்சியில் போதைப்பொருள் குறித்து இளைஞா்களுக்கு காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, அமா்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியமிளகுபாறை பகுதியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்டத் திட்ட அலுவலா் மருத்துவா் மணிவண்ணன் கலந்துகொண்டு, இளைஞா்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சாா்ந்த கருத்து, தகவல்களைக் கூறி, போதைக்கு எதிராக போராடுவதற்கான அறிவுரைகளை வழங்கினாா்.
கன்டோன்மெண்ட் காவல் ஆய்வாளா் சேரன், அமா்வு நீதிமன்ற உதவி ஆய்வாளா் மோகன், காவலா்கள் மற்றும் பெரியமிளகுபாறை பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்து கொண்டனா்.