திருச்சி அண்ணா சாலையில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சி அண்ணா சாலையில் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வயல்வெளியில் இறங்கி நூதன முறையில் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.