மணப்பாறையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், விவசாயிகள் - சிறுவணிகர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் பேருந்துநிலையம் அருகே நகர செயலாளர் கீதா மைக்கில்ராஜ் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிட கழகங்களைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.