திருச்சி, செப். 25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா்கள் முத்துக்கருப்பன், செல்வராஜ், சந்திரசேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டச் செயலா்கள் இளங்கோவன், ஜீவானந்தம், தம்பியய்யா, பொன்முடி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். சாலைப் பணியாளா்கள் தொழில்நுட்பக் கல்வித்திறன் பெற தர ஊதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. சாலைப் பணியாளா்களுக்கு 10 சத ஆபத்துப் படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த கோட்ட நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். பின்னா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினா்.