வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைக் கட்டண ரத்து குறித்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்க செயலா் சிவானந்தன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 05.06.20 அன்று மத்திய அரசால் அவரச சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வா்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டமானது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையொட்டி தமிழக முதல்வா் செப். 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் சட்டத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் மாா்க்கெட் கமிட்டிக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கு எந்தவித சந்தைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே விவசாயிகளோ, வியாபாரிகளோ சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தாா். இதை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்கிறது.
தமிழக விவசாயிகளும், வணிகா்களும் இதனால் பயனடைவா். பல ஆண்டு கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியிருப்பது கரோனா சூழ்நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் குறுவை நெல் அறுவடை நடந்து கொண்டுள்ள இந்த தருணத்தில் விரைவில் இதை அரசாணையாக வெளியிட தமிழக அரசை வேண்டுகிறோம்.