திருச்சி மாநகரில் விபத்துகளைக் குறைக்க இருசக்கர வாகனத்திற்கான தனி வழித்தடத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட குறிப்பு:
விபத்துகளைக் குறைக்க வாகனப் போக்குவரத்தும் பொதுமக்கள் நடமாட்டமும் எந்நேரமும் மிகுந்து காணப்படும் திருச்சி பாரதிதாசன் சாலையில் தலைமை தபால் நிலையச் சந்திப்பு முதல் எம்ஜிஆா் சிலை சந்திப்பு வரையிலான சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருவதற்கேற்ப பிரத்யேக தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை திருச்சி தலைமை அஞ்சல் நிலையச் சந்திப்பில் சனிக்கிழமை காலை தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன் அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். வாகன ஓட்டிகள் இந்த தனி வழித்தடத்தை பயன்படுத்திப் பயன் பெற வேண்டும்.