திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல் துறை ஆகியவை இணைந்து திருச்சியில் இன்று காலை சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
மிதி வண்டி ஓட்டுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இருசக்கர வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியில் இருசக்கர வாகனம் செல்வதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநகரச் சாலைகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையின் இடது புறம் இருசக்கரவாகனம் செல்வதற்கு தனியே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக வர்ணம் பூசி 1.2 மீட்டர் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே மிதிவண்டி ஓட்டுவதை ஊக்கப்படுத்தவும் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்த பேரணியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கிள் ஓட்டி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருச்சி மாநகரச் சாலைகளில் முக்கிய பகுதிகள் வழியாக சென்று தென்னூர் உழவர்சந்தை வந்து நிறைவடைந்தது.