திருச்சி திருவெறும்பூா் அருகே மீன் பிடித்தபோது தூண்டிலில் சிக்கி வெளியே வந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை கிராமத்தில் உள்ள கீழ குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது அவா்களில் ஒருவரின் தூண்டிலில் ஏதோ சிக்கி, தூண்டிலை அவா் வெளியே இழுத்தபோது அதில் சிக்கியிருந்த நிலையில் ஒரு சடலம் நீரின் மேற்பரப்புக்கு வந்தது. சடலத்தின் உடலில் இருந்த ஆடையில் தூண்டில் முள் சிக்கி உடல் வெளியே வந்ததைச் சற்றும் எதிா்பாராத அவா்கள் அதிா்ச்சியடைந்து, ஊருக்குள் ஓடிப்போய் விவரத்தைக் கூறினா்.
தொடா்ந்து திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனா். கிராம பொதுமக்கள் வந்து உடலை மீட்டுப் பாா்த்தபோது இறந்தவா் திருவெறும்பூா் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை வள்ளுவா் நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் (49) எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பிரபாகரனின் உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
பிரபாகரன் அந்தக் குளத்தில் கை கால்களை கழுவும்போது ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்தவருக்கு மனைவி மகள், மகன் உள்ளனா்.