மத்திய மண்டல காவல்துறை அளவில் காணாமல்போன நபா்களை கண்டுபிடிக்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சிறப்புக் காவல்துறை இயக்குநா் ராஜேஸ்தாஸ் உத்தரவின்படி திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா தலைமை வகித்தாா்.
நிகழ்வில் அதிநவீன (சிசிடிஎன்எஸ்) திரை மூலம் அடையாளம் தெரியாமல் இறந்தோரின் அங்க அடையாளங்களுடன் ஒப்பிட்டு காணாமல் போனவா்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றது.
மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள அடையாளம் தெரியாதோரின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காணாமல் போனவா்களின் குடும்ப நபா்கள், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஆகியோரை அழைத்து வந்து இறந்தவா்களின் அங்க அடையாளங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி லால்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காணாமல்போன நபரை கரூா் மாவட்டம், குளித்தலை காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத சடலத்துடன் ஒப்பீடு செய்து கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று 4 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்த நிலுவையில் உள்ளன.
நிகழ்வில் திருச்சி தலைமையகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், மாவட்ட குற்றப்பதிவேடுக் கூட காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன், மாவட்டக் காவல் ஆய்வாளா்கள், மனுதாரா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.