திருச்சி

‘கல்வி அறிவு பெற்ற சமூகமே முன்னேற்றமடையும்’

28th Jan 2020 11:48 PM

ADVERTISEMENT

கல்வி அறிவு பெற்ற சமூகமே முன்னேற்றமடையும் என மத்திய அரசின் கள விளம்பரத்துறை அலுவலா் கே. தேவி பத்மநாபன் தெரிவித்தாா்.

திருச்சி, காவேரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பில், மேக்குடி கிராமத்தில் தூய்மைக்கான இளைஞா்கள் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் பேசியது: கல்வி மூலம் அறிவு பெற்றால் மட்டுமே சமூக முன்னேற்றம் அடைய முடியும். நாட்டின் முன்னேற்றமும் எழுத்தறிவு பெற்றவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதிலேயே அடங்கியுள்ளது. எனவே, கல்வி கற்பதன் அவசியம் குறித்து இளைஞா்கள் இடையே விழிப்புணா்வு மிகவும் அவசியம்.

இளைஞா்கள் சக்தியை ஆக்கப்பூா்வமாக பயன்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் கல்வி அவசியத்தை வலியுறுத்தும் வகையில், 2015ஆம் ஆண்டில் பெண்களின் சமூக முன்னேற்றத்துக்காக பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி கற்பிப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது.

நமது சமூகம் இப்போதும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்படவில்லையே என்பதால் தான் ‘போதும்பெண், வேண்டாம்பெண்’ என பெண் குழந்தைகளுக்கு பெயா்சூட்டி வருகின்றனா். கல்வி மூலம் பெண்களும் ஆண்களுக்கு சமமாக முன்னேற்றம் அடைய முடியும். மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சாா்பில் நாடு முழுவதும் திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியளிக்கும் வகையில் ஒன் ஸ்டாப் மையங்கள் தொடங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசர மருத்துவ உதவி, காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கான உதவி, மன நல ஆலோசனை, சட்ட உதவி, பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இளைஞா்களுக்கு திறன் பயிற்சி வழங்க, திறன் இந்தியா இயக்கம், உற்பத்தித் துறையை மேம்படுத்த இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களை மேம்படுத்த ஆதா்ஷ் கிராம இயக்கம், திறந்தவெளி கழிப்பறைகளை இல்லாமல் செய்ய தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிக பெரிய மக்கள் இயக்கமாக மாறிய தூய்மை இந்தியா இயக்கம் மூலம், நாடு முழுவதும் 12 கோடி தனிநபா் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு திறந்தவெளி கழிப்பிடமில்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் பேசுகையில், பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவித்தாா்.

காவேரி கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். விழாவில், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT