திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிா் குழுக்களுக்கு நடப்பாண்டு இதுவரை ரூ. 387 கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து வங்கியாளா்கள் ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் மேலும் பேசியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தாட்கோ, மாவட்டத் தொழில் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பொதுமக்களிடமிருந்து கடனுதவி வேண்டி பெறப்பட்ட மனுக்களுக்கு கடன்களை நிலுவையின்றி வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சுமாா் 14,000 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ள நிலையில், 2020-21 ஆம் ஆண்டுக்கு வங்கிகள் மூலம் 10,866 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.387.57 கோடியில் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன் பெற்ற சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி தொழில்கள் செய்தும், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கண்ணணூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 14.85 லட்சமும், பகளவாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு சிங்களாந்தபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.44.10 லட்சம் பெருங்கடனும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யநாராயணன், உதவித் திட்ட அலுவலா் ஜான்பால் ஆண்டனி, திருமதி மற்றும் கூட்டுறவு வங்கி அலுவலா்கள், வங்கி மேலாளா்கள் கலந்து கொண்டனா்.