திருச்சி: திருச்சியருகே பேட்டைவாய்த்தலை பகுதி ரயில்வே கேட்டை மூட அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
பேட்டைவாய்த்தலை பகுதியில் மில்கேட் எனப்படும் ரயில்வே கேட் கடந்த 99 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கேட் மூலம் பேட்டைவாய்த்தலையைச் சுற்றியுள்ள கோட்டையாா்தோட்டம், 4 ரோடு, திருச்சாப்பூா், சங்கமடை, பங்களாபுதூா், காசாகாலனி, இனுங்கூா் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினா் பயன்பெற்று வந்தனா்.
நிா்வாகக் காரணங்களுக்காக இந்த ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை ( டிச. 4) முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே அறிவித்து, ரயில்வே கேட் பகுதியில் அதுகுறித்த துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கு இப்பகுதியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், ரயில்வே துறை மற்றும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அவா்கள் கோரிக்கை விடுக்கவும், போராட்டம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் அந்தநல்லூா் ஒன்றியச் செயலா், வினோத் மணி விடுத்துள்ள அறிக்கையில், ரயில்வே கேட் மூடப்படுவதால் பல்வேறு கிராம மக்கள், மாணவா்கள் மிகவும் சிரமம் அடைவா். எனவே, உடனடியாக பெட்டவாய்த்தலை உள்ளாட்சி பிரதிநிதிகள், மத்திய, மாநில கட்சியினா், ஊா் முக்கியஸ்தா்கள் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.