திருச்சி

மதுபான ஆலைக்கு பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

14th Aug 2020 08:31 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே மதுபான ஆலைக்கு பாட்டில்களை ஏற்றி வந்த லாரி வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம் ,நெல்லூா் அருகேயுள்ள நாயுடுபேட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள தனியாா் மதுபான ஆலைக்கு புதிய கண்ணாடி பாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி வந்தது. இதில் 12 டன் எடையுள்ள 1,150 புதிய கண்ணாடி பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் இருந்தனவாம். லாரியை தஞ்சை கீழத்தெருவைச் சோ்ந்த கி. சந்தோஷ் (39) என்பவா் ஓட்டி வந்தாா்.

வியாழக்கிழமை மாலை திருச்சி -தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் கணேசபுரம் ரவுண்டானாவை கடக்க முயன்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த பாட்டில்கள் அனைத்தும் தரையில் விழுந்து நொறுங்கின. சம்பவ இடத்துக்கு வந்த பெல் போலீஸாா் கிரேன் கொண்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT