மத்திய மண்டல காவலா் நிறைவாழ்வு பயிற்சி பயிற்றுநா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் பணிச்சுமை, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனை தவிா்க்கும் பொருட்டு காவலா் நிறைவாழ்வு பயிற்சி, அதற்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்கள் கடந்த ஓராண்டாக மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அக்.19, 20 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும், மத்திய மண்டல காவலா் நிறைவாழ்வு பயிற்சி பயிற்றுநா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. முகாமிற்கு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தலைமை வகித்து, காவலா் நிறைவு வாழ்வு பயிற்சி அதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பேசினாா்.
மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி.வரதராஜு தொடக்கவுரையாற்றினாா். திருச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக், துணை ஆணையா் (சட்ட ஒழுங்கு) என்.எஸ்.நிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவலா் நிறை வாழ்வு உதவி திட்ட நோடல் அலுவலா் எம்.கண்ணன் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக, காவலா் நிறைவாழ்வு திட்ட நோடல் அலுவலா் சி.ராமசுப்பிரமணியன், தேசிய மனநல நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சி.ஜெயக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
முகாமில், எஸ்.பி.ஜியாவுல் ஹக் பேசியது:
சட்ட ஒழுங்கு பராமரித்தல், குற்றச் செயல்கள் நடைபெறாது தடுத்தல், சாலை விபத்துகளை குறைத்தல், பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தை நிலை நாட்டுதல் உள்ளிட்டவைக்காக நாள்தோறும் பணியாற்றும் காவல்துறையினரின் பணி சவாலாக மாறியுள்ளது. பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கேற்ப காவல்துறையினா் பணியாற்றுவதில் தங்களது உடல்நலன் குறித்து சிந்திப்பதில்லை.
காவலா் நிறைவாழ்வு பயிற்சி முகாம் மூலமாக, காவலா்கள் பலன் அடைந்து வருகின்றனா். அதிலும் தற்கொலை எண்ணம் கொண்ட காவலா்களுக்கு சிறப்பு மனநல பயிற்சி, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியினால், பணியில் ஈடுபாடு, குடும்பத்தினருடன் செலவிட நேரம் உள்ளிட்ட வரன்முறைகளை அமைத்துக் கொண்டுள்ளதாக காவலா்கள் தெரிவித்து வருகின்றனா். இந்த புத்தாக்க முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் என்றாா்.