திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரே நாளில் 71 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால், அவர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவின.
இந்த நிலையில், 2 துணைப் பதிவாளர்கள், 2 உதவிப் பதிவாளர்கள் உள்பட 71 பேர் திங்கள்கிழமை மாலை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் பிறப்பித்தார்.
10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பிரிவில் பணியாற்றுபவர்களைத் தவிர்த்து, 6,7 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இந்த பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாகப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் தெரிவித்தது: நாக் கமிட்டியின் ஏ-பிளஸ் தகுதியை அண்மையில்தான் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்ற நிலையில், ஒரே நாளில் 71 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை அதே பிரிவில் வைத்துக் கொண்டு, அதற்கு குறைவான காலத்தில் பணியாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த பணியிட மாற்ற நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர் சேர்க்கைப் பணியையும் பாதிக்கும் என்றனர்.