சமரச சன்மார்க்கத்தை உருவாக்கி, மனிதர்களிடையே சிந்தனையை ஏற்படுத்தியவர் வள்ளலார் என்றார் சாகித்ய அகாதெமி விருதாளரும், தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழாய்வுத் துறை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாவுக்கரசர் சோ. சத்தியசீலன்- தனபாக்கியம் சத்தியசீலன் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் பங்கேற்று, வள்ளலார் ஒரு யுகசந்தி என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
மனிதர்களைத் தேடுவதும், மனிதத்தை கொண்டாடுவதும்தான் இலக்கியத்தின் நோக்கம்.
இன்றைக்கு மனிதர்களை மனிதர்களாகவே காணமுடியவில்லை. வயலில் உற்பத்தியாகாத பொருளாக மனிதன் இருப்பதால்தான், நல்ல மனிதர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை எல்லா காலங்களிலும் இருந்துள்ளது. 19 -ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களில் முக்கியமானவரான வள்ளலார்தான். 20- ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் சிந்தனையை ஏற்படுத்த வழி வகுத்தார்.
இவரது காலத்தில் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தான், பிற்காலத்தில் பாரதியார், பாரதிதாசன் போன்றோர் உருவாக அடிப்படையாக அமைந்தது. வெடிகுண்டு கலாச்சாரம், சமயக் கொலைகள் இல்லாத காலத்தில் சமரச சன்மார்க்கத்தை உருவாக்கி, மனிதர்களிடையே சிந்தனையை ஏற்படுத்தியவர் வள்ளலார்.
தமிழ் வளர்ச்சியில் அமைப்புகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். தமிழ் வளர வேண்டிய தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வியைத் தேடிச் செல்கின்றனர். மேல்
படிப்புக்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து, மாணவர்களிடையே மனித உணர்வு இல்லாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். வள்ளலார் வடமொழியில் சிறந்து விளங்கினாலும், தமிழ் மொழியின் காவலாளியாக தான் விளங்கினார். பசி பிணியைத் தீர்க்க தனி அமைப்புகளை உருவாக்கி பெரும் தொண்டாற்றினார்.
இதை தான் இன்றைக்கு யுனெஸ்கோ போன்ற உலக அமைப்புகள் அகதிகளுக்கு மேற்கொள்கின்றன.
மனிதனின் மரணமில்லாத பெருவாழ்வு என்ற வள்ளலாரின் கூற்றை தமிழாய்வு மாணவர்கள் ஆராய்ச்சி கொள்வதை இலக்காக கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப.மணிசங்கர் நிகழ்வுக்கு தலைமை வகித்து பேசினார்.
நிகழ்வுக்கு பேராசிரியர் சோ.சத்தியசீலன், தனபாக்கியம் சத்தியசீலன், ராம்சங்கர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தமிழியல்
துறைத் தலைவர் பேராசிரியர்
உ. அலிபாவா வரவேற்றார். நிறைவில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை உதவி இருக்கை மருத்துவர் சித்ரா திருவள்ளுவன் நன்றி கூறினார்.