துறையூர் அருகிலுள்ள சிக்கத்தம்பூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கத்தம்பூர் கிராமத்தில் 20 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டாலும், ஊராட்சி நிர்வாகம் மின் மோட்டார்களை வைத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக இப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து துறையூர் ஒன்றிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சிக்கத்தம்பூர் கிராம மக்கள், துறையூர்-ஆத்தூர் சாலையில் செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர்.