மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, 4 கி.மீ. தொலைவு நடந்து சென்ற கிராம மக்கள் துறையூர் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
துறையூர் ஒன்றியத்தைச் சேர்ந்தது வெங்கடேசபுரம் ஊராட்சி. கடந்த 3 மாதங்களாக இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் சரிவர பணிகள் வழங்கப்படுவதில்லையாம்.
இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், 4 கி.மீ. தொலைவிலுள்ள துறையூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வயல் வெளி வரப்புகள் வழியாக நடந்து சென்று திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பெரியசாமி பொதுமக்களிடம் பேசி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.