தனியார் மயமாவதைக் கண்டித்து படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு ராணுவ பயன்பாட்டிற்கு தேவையான துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், குண்டுகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், 41 படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், இதற்கான முன்னோட்ட பணிகளை மேற்கொள்வதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன்.
அதன்படி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில் ஐஎன்டியுசி, சிஐடியு, தொமுச , அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.