ஈரோடு மாவட்டம், புதுப் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (55) அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சையில் இருந்து ஈரோட்டிற்கு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகே வந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் திடீரென மோதியது.
இதில் காரில் இருந்தோர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீஸாருக்கும், திருச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டனர். இருப்பினும் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தார். சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.