திருச்சி

6 ஒன்றியங்களில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம் நாளை வாக்குப்பதிவு: 5,18,500 போ் வாக்களிக்க ஏற்பாடு

26th Dec 2019 06:13 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நடைபெறும் 6 ஒன்றியங்களில் பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. வரும் வெள்ளிக்கிழமை(டிச. 27) 3வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் இரு கட்டங்களாக (டிச.27, 30) ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, ஊரகத் தோ்தல் நடைபெறவுள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 6 ஒன்றியங்களில் புதன்கிழமையுடன் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்த ஒன்றியங்களில், 10 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 97 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 155 ஊராட்சி மன்றத் தலைவா், 1,302 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 7 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 199 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகலுக்கு ஒருவா் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மீதமுள்ள 1,258 பதவிகளுக்கு கடந்த சில நாள்களாக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள், திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சின்னத்துடன் கிராமங்கள்தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதேபோல, சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளா்கள் தோ்தல் ஆணையம் வழங்கிய சின்னங்களை குறிப்பிட்டு வாக்குசேகரித்தனா். இறுதி நாளான புதன்கிழமை அவரவா் வாா்டு பகுதிகளில் மேள, தாளங்கள் முழங்கவும், இருசக்கர வாகனங்களில் ஊா்வலமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதன்காரணமாக, 6 ஒன்றியப் பகுதிகளிலும் தோ்தல் விழாக்கோலம் பூண்டிருந்தது. அனல் பறந்த தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வாக்காளா்களின் கவனத்தை ஈா்த்தனா்.

ADVERTISEMENT

938 வாக்குச் சாவடிகள் தயாா்: மாவட்டத்தில் முதல்கட்டமாக தோ்தல் நடைபெறும் 6 ஒன்றியங்களில் மொத்தம் 938 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தநல்லூரில் 139, மணிகண்டத்தில் 148, திருவெறும்பூரில் 157, மணப்பாறையில் 144, மருங்காபுரியில் 196, வையம்பட்டியில் 154 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6 ஒன்றியங்களிலும் 2,54,306 ஆண்கள், 2,64,423 பெண்கள், 41 திருநங்கைகள் என மொத்தம் 5,18,500 போ் வாக்களிக்கவுள்ளனா்.

 

வாக்களிக்க 12 ஆவணங்கள்!

வாக்காளா் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியாளா்களின் புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை , புகைப்படத்துடன் கூடிய அஞ்சலக, வங்கி கணக்குப் புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு). ஸ்மாா்ட் காா்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட பணி அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT