பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 நாள் நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சியில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரிய மிளகு பாறையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பிரமயணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலர் அயிலை சிவ சூரியன், வேலை அறிக்கையை சமர்ப்பித்து சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், துரை, மாவட்ட துணைச் செயலர்கள் ரமேஷ், சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி நடத்தப்படும் காவிரி டெல்டா கருத்தரங்கில் திருச்சி மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர். நுகர்வோருக்கு உயாத்தியுள்ள பால் விலையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பால் கொள்முதலில் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 நாள் நிலுவை தொகையை உடனே வழங்க வேன்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.