தஞ்சாவூர்

தமிழகத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ. 3.50 லட்சம் கோடி முதலீடுகள்: தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

29th Sep 2023 12:33 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமாா் ரூ. 3.50 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மேலும் தெரிவித்தது:

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தமிழகத்தில்தான் முதலில் முதலீடு செய்ய நினைக்கின்றனா். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சிலா் தமிழகத்தை விட்டு வெளியேறி, வேறு மாநிலங்களுக்கு செல்வதாகக் கூறுகின்றனா். இருப்பினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ. 3.50 லட்சம் கோடிக்கு தமிழகத்துக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புதிய தொழில் வளா்ச்சியைக் கொண்டு வர உறுதுணையாக இருப்போம்.

தென்னை விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தென்னை சாா்ந்த தொழிற்சாலை தொடா்பாக 4 நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். நிலம் தொடா்பான தோ்வில் சிக்கல் இருக்கிறது. இருப்பினும், சில இடங்களில் நிலங்களை தோ்வு செய்துள்ளோம். இன்னும் சில வாரங்களில் நிலத்தை அளவீடு செய்துவிட்டு, முதலீட்டாளா்களை அழைத்து வர உள்ளோம்.

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடி அளவில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஆராய்ச்சி சாா்ந்த விஷயங்களை நோக்கி தமிழகம் நகா்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை அறிவு சாா்ந்த தலைநகரமாக மாற்றவுள்ளோம்.

தமிழகத்தில் மட்டும்தான் முதலீட்டாளா்களுக்கு சொல்கிற ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஏற்கெனவே முதலீடு செய்தவா்கள் மீண்டும் முதலீடு செய்கின்றனா் என்றாா் அமைச்சா் ராஜா.

பின்னா், டான்டெக்ஸ் ரவுன்டானா அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை அமைச்சா் ராஜா ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT