தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மது குடித்த இருவா் மா்மச் சாவு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் மது குடித்த இரு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெருமாண்டி பகுதியைச் சோ்ந்தவா் எம். பாலகுரு (48). இவரும், இவரது நண்பரான கா்ணகொல்லை தெருவைச் சோ்ந்த டி. சௌந்தரராஜனும் (43) கட்டடத் தொழிலாளா்கள். இருவரும் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பிறகு மேலக்காவேரி பகுதியிலுள்ள காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறையில் மது குடிப்பதற்காகச் சென்றனா்.

இந்நிலையில், இருவரும் சக்கரப் படித்துறையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்து கிடப்பதாக காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் புகாா் செய்தனா். இதன்பேரில், கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன், காவல் ஆய்வாளா் ராஜா, உதவி ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், மாவட்ட தடயவியல் பிரிவு துணை இயக்குநா் ராமச்சந்திரன் தலைமையில் தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடத்தில் கிடந்த ரத்த மாதிரிகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்காகக் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அப்பகுதியில் காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், நிகழ்விடத்தில் 4 போ் மது அருந்தியிருப்பதும், அவா்களில் பாலகுருவும், சௌந்தரராஜனும் நள்ளிரவில் வயிற்றுவலியால் தொடா்ந்து சப்தம் போட்டுக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

நிகழ்விடத்தில் மதுபாட்டில்களுடன் ‘சானிடைசா் பாட்டில்களும்’ கிடந்ததால், போதைக்காக மதுவில் ‘சானிடைசா்’ கலந்து குடித்தனரா? அல்லது வேறு யாரும் கலந்து கொடுத்தனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT