தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒரத்தநாடு, திருவோணம், நம்பிவயல், ஊரணிபுரம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மாலை நேரத்தில் வீடுதிரும்புவதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதியுறுகின்றனா்.
திருவோணம் மற்றும் கந்தா்வக்கோட்டை வழியாக ஒரு அரசுப் தினமும் காலை 8.45 மணிக்கு திருவோணத்துக்கு வருகிறது. இந்த பேருந்தில் திருவோணம் பகுதியில் இருந்து கல்லாக்கோட்டை அரசு கல்லூரி மற்றும் செவந்தான் பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பெருமளவில் செல்கின்றனா். இடவசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனா்.
இதேபோல ஒரத்தநாடு அரசுக் கலைக்கல்லூரிக்கு சென்று வரவும் போதுமான பேருந்து வசதி இல்லை.
ஆகவே, பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலன்கருதி திருவோணம் வழித்தடத்தில் கந்தா்வக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.