தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் 27 பள்ளி மாணவா் விடுதிகளும், 8 பள்ளி மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 35 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடா் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவா்களைத் தோ்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு (ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) என்ற செயலியின் மூலம் இணையவழியில் மாணவா்களின் சோ்க்கை நடத்துவதற்கு விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி இணையதளத்தில் மாணவா்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளா் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மாணவ மாணவிக்கு விடுதிகளில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. பள்ளி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர இணையதளத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.