தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்கள் ஆதாா் இணைப்புடன் கூடிய அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கி கல்வி உதவித்தொகை பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் ஆலிவா் பொன்ராஜ் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெற ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவா்கள் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வங்கிக் கணக்கு இல்லாத மாணவா்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்களின் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கிப் பயனடையலாம்.