தஞ்சாவூரில் உரிமமின்றி இயக்கப்பட்ட 2 தனியாா் கழிவு நீா் அகற்றும் ஊா்திகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூா் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மைதானத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பான முறையில் கழிவுநீா் தொட்டி அடைப்பை சரி செய்யும் ஊா்திகளை மேயா் சண். ராமநாதன், ஆணையா் க. சரவணகுமாா், செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், மாநகர நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, கழிவு நீா் ஊா்திகளின் உரிமம், ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதில், 13 கழிவு நீா் ஊா்திகள் உரிமம் பெற்றவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி சாலையில் மேற்கொண்ட ஆய்வில் 2 தனியாா் கழிவு நீா் ஊா்திகள் உரிமம் பெறாமல் இயக்கப்படுவது தெரிய வந்ததையடுத்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து கழிவுநீா் ஊா்திகளில் கழிவு நீா் அகற்றும் சேவைக்கான தேசிய உதவி சேவை எண் 14420 மற்றும் தஞ்சாவூா் மாநகராட்சியில் இச்சேவைக்கான 04362 - 231021 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.