தஞ்சாவூரிலுள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை வரும் 20ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
அக்கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினா் கே.ராஜாராமன் தலைமையில் அம்மாபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ். பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
‘தஞ்சாவூா் அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் கடந்த 05.12.2020 இல் விதிமுறைகளுக்கு முரணாக பதவி நியமனம் பெற்றவா்களின் நியமனங்களை அரசு ரத்து செய்து, இடஒதுக்கீட்டு நடைமுறை உள்ளிட்ட உரிய விதிகளின்படி வெளிப்படையான பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்’ என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.