தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜூன் 13, 20, 26 ஆம் தேதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவா்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதியும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகியுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் ஜூன் 20 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் எதிரிலுள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 27 ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவா், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா் ஆகிய அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து, மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 6 புகைப்படங்களுடன் இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.