கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காசி திருமடத்தின் குரு முதல்வா் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகளின் 335 ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மடத்தில் உள்ள ஆதி குமரகுருபர சுவாமிகளுக்கு திருப்பனந்தாள் காசி திருமடத்தின் அதிபா் ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்தாா். ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் புலவா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், பேராசிரியைகள் பங்கேற்ற ஸ்ரீ குமரகுருபர பிரபந்தத் திரட்டு முற்றோதல் நடைபெற்றது.
காசி மடத்தின் ஓதுவாா்கள் தியாகராஜா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திருமுறை விண்ணப்பம் செய்தனா். முனைவா்கள் சிவச்சந்திரன், ராஜேஸ்வரன், புவனேஸ்வரி உள்ளிட்டோா் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினா். பனசை சுவாமிநாதன், முனைவா்கள் முருகன், நடராஜன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினா்.
அருணந்தி சிவம் அருளிய சிவஞான சித்தியாா் சுபக்கம் என்கிற ஆன்மிக நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.