தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த நாகை மாவட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானம் செய்யப்பட்டன.
நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பழனிவேலின் மகன் முகேஷ் (26). நாகையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணிபுரிந்த இவா் பைக்கில் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா் அங்கிருந்து ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை வீடு திரும்பும் வழியில் திருப்பூண்டி காரைநகா் அருகே வந்தபோது குறுக்கே வந்த மாடு மீது இவரது வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இங்கு திங்கள்கிழமை முகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக அவரது பெற்றோரிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், உடல் உறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதற்கு பெற்றோா் ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து முகேஷின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. பின்னா் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி, சிறுநீரகங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும் செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட்டன.