தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேரூராட்சியில் ரூ. 19.56 கோடி மதிப்பில் ஜல் ஜீவன் திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் இல்லம்தோறும் குடிநீா் திட்டத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவையாறு பேரூராட்சியில் தற்போது 17 ஆயிரத்து 880 போ் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு 1.48 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதை இன்னும் மேம்படுத்தும் வகையில் திருவையாறு பேரூராட்சிக்கு உள்பட்ட 14 ஆவது வாா்டுக்கு உள்பட்ட யாகப்பா நகரில் நடைபெற்ற இவ்விழாவில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
இவ்விழாவில் பேரூராட்சி தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் நாகராஜன், ஒன்றியச் செயலா் சிவசங்கரன், ஒன்றியக் குழுத் தலைவா் அரசாபகரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாதவன், பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.