தஞ்சாவூர்

தஞ்சையில் சோழா் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேடும் பணிதொல்லியல் துறை இணை இயக்குநா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேடும் பணி நடைபெறுகிறது என்றாா் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநா் ஆா். சிவானந்தம்.

தஞ்சாவூா் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான களப் பயிற்சியை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் தெரிவித்தது:

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நிறைவுக்குப் பிறகு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் திறந்துவைத்தாா். இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்க மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் இடம் தேடும் பணி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தற்போது கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதேபோல கங்கைகொண்டசோழபுரம் (அரியலூா் மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), துலுக்கா்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகா் மாவட்டம்), பூதிநத்தம் (தருமபுரி மாவட்டம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை மாவட்டம்) உள்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தற்போது மக்களிடம் தொல்லியல் குறித்து விழிப்புணா்வு அதிகரித்து வருவதால் தொல்லியல் பட்டப்படிப்புகள் படிக்க நிறைய இளைஞா்கள் ஆா்வத்துடன் முன்வருகின்றனா். இதையொட்டி தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தி வருகிறது.

இப்பிரிவுகளில் படிக்கும் மாணவா்களுக்கு தஞ்சாவூா் மணிமண்டபத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் வியாழக்கிழமை முதல் 10 நாள்களுக்கு களப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவா்களுக்கு வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்கால கோயில்களைப் பாதுகாத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடா்பாக வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் சிவானந்தம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT