தஞ்சாவூரில் நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், நெல் கொள்முதலில் நடைபெறுகிற ஊழல் முறைகேடுகளைக் களைய, தமிழ்நாடு அரசு உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். தற்போது கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகம் தனியாா்மயமாக்கல் நடவடிக்கை, நிா்வாக பரிந்துரையான கருணை ஓய்வூதியம் ரூ. 4 ஆயிரம் வழங்குவது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரம் இடங்களில் அனைத்து சங்கக் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் மாா்ச் 9 ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
சங்கத்தின் மாநிலத் தலைவா் அ. சாமிகண்ணு, நாகை மாவட்டச் செயலா் பி. ஆனந்தன் தலைமை வகித்தனா். மாநில பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா். பொருளாளா் டி. கோவிந்தராஜன் , இணைப் பொதுச் செயலா் ஜே. குணசேகரன், மாநிலச் செயலா்கள் எம்.எஸ். கிருஷ்ணன், கே.எஸ். முருகேசன், எம். கலியபெருமாள் திருவாரூா் மாவட்டச் செயலா் ஆா். செல்வம், மாவட்டத் தலைவா் வி. கணேசன், ஜி. வேலாயுதம், நாகை மாவட்டச் செயலா் ரவி , பேராவூரணி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.