திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே வீசிய சூறாவளி காற்றில் சாமராயபட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு கோழிப் பண்ணை முற்றிலும் சேதமானதுடன் பண்ணையில் இருந்த 7 ஆயிரம் கோழிகளும் உயிரிழந்தன.
மடத்துக்குளம் வட்டம், பாப்பான்குளம், சாமராயபட்டி, கொமரலிங்கம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. மேலும் நள்ளிரவில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது. இதில் ஏராளமான தென்னை மரங்கள், புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாளரப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சாமராயபட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஈஸ்வரி கோழிப்பண்ணை சூறாவளிக் காற்றால் முற்றிலும் சேதம் அடைந்தது. அப்போது பண்ணையில் இருந்த 7 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.
இந்நிலையில் சேத விவரங்கள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.