தஞ்சாவூரில் மருத்துவம் படிக்காமல் மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகரைச் சோ்ந்தவா் எம். சுப்பிரமணியன் (75). மருந்தியல் (பாா்மசி) படித்த இவா் தஞ்சாவூா் நகராட்சியில் (இப்போது மாநகராட்சி) மருந்தாளுநராகப் பணியாற்றி கடந்த 2005 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாா்.
இதையடுத்து மாதாகோட்டை முதன்மைச் சாலையில் மருந்தகம் அமைத்து பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தாா். மருந்தியல் படிப்பு மட்டும் படித்துவிட்டு, போதிய கல்வித் தகுதி இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் இவா் சிகிச்சை அளித்து வருவதாகப் புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கே. திலகம் அளித்த புகாரின்பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் இவரது மருந்தகமும் மூடப்பட்டது.