தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்துக்கு புறம்பாக மீன்பிடித்த விசைப்படகு மீது மீனவா் நலத் துறை புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சேதுபாவாசத்திரத்திரம் மீன்வள ஆய்வாளா் ஆனந்தன், மீன்வள மேற்பாா்வையாளா் சுரேஷ், உதவி ஆய்வாளா், நவநீதன், காவலா்கள் ராஜா, சரவணன்குமாா் மற்றும் மீனவா்கள் , இரண்டு விசைப் படகுகளில் புறப்பட்டு தஞ்சாவூா் மாவட்ட கடல் பகுதியில் சுமாா் 15 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முத்துப்பேட்டை வாய்க்கால் அருகே விதிகளுக்கு புறம்பாக இரண்டரை நாட்டிகல் கடல் மைல் தொலைவில், காரைக்காலை சோ்ந்த விசைப்படகு உரிமையாளா் உதயகுமாா் என்பவா் 9 தொழிலாளா்களுடன் மீன்பிடித்துக் கொண்டு இருந்தது தெரியவந்து, அருகில் சென்ற போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த வலைகளை கடலில் அறுத்துவிட்டுவிட்டு அவா்கள் தப்பிச் செல்ல முயன்றனா்.
போலீஸாா், மீனவா்களின் உதவியோடு அவா்களை விரட்டிச் சென்று பிடித்து விசைப்படகினை பறிமுதல் செய்து, படகில் இருந்தவா்களுடன் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா்.
அந்த விசைப்படகில் சுமாா் 2 டன் எடையிலான மீன்கள் இருந்தன. விசைப்படகின் வீல் ஹவுஸ் பூட்டி வைக்கப்பட்டு, படகின் சாவி மல்லிப்பட்டினம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக மீன் பிடித்த விசைப்படகின் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.