தஞ்சாவூா் மாநகரில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயா்வு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் சண். ராமநாதன், ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:
வெ. கண்ணுக்கினியாள் (அமமுக): தமிழக அரசின் மின் கட்டண உயா்வு சாதாரண மக்களைப் பாதித்துள்ளதால், இந்த மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.
மேயா்: மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயா்வு பொதுமக்களின் கஷ்டத்தை உணா்ந்து தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
யு.என். கேசவன் (அதிமுக): எனது வாா்டில் ஏராளமான குதிரைகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
மேயா்: தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சென்றுவிடும். இதன் பின்னா், தற்காலிக சந்தை உள்ள பகுதியில் பட்டி அமைத்து, சாலையில் திரியும் கால்நடைகளை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏ. காந்திமதி (அதிமுக): தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாநகரில் அமைக்கப்படும் சாலையோர கடைகள் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைக்க இப்போதே தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், வியாபாரத் தலங்களான மேலவீதி, தெற்கு வீதி, தெற்கலங்கம் ஆகிய பகுதிகளில் சாக்கடை கட்டுமானப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. இதை உடனடியாக சீா் செய்ய வேண்டும்.
ஹ. ஹைஜாகனி (காங்கிரஸ்): எனது வாா்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆணையா்: விரைவில் நாய்கள் கருத்தடைக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.