கும்பகோணத்தில் அரசுப் பேருந்தில் முதியவா் தவறவிட்ட ரூ. 25,000 ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநரின் நோ்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனா்.
பட்டுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வந்தது. அப்போது, பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையை நடத்துநா் முருகேசன் எடுத்து, தனது பொறுப்பில் வைத்திருந்தாா்.
இதனிடையே, பையைத் தேடி வந்த கும்பகோணத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (61), நடத்துநா் முருகேசனை அணுகி, அது தனது பை எனக் கூறினாா். மேலும், பையில் ரூ. 25,000 ரொக்கம் மற்றும் அதற்கான அடையாளத்தையும் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
இதையடுத்து, போக்குவரத்து வணிகப் பிரிவு உதவிப் பொறியாளா் ராஜ்மோகன் முன்னிலையில் விஸ்வநாதனிடம் முருகேசன் ஒப்படைத்தாா். இதற்காக முருகேசனுக்கு விஸ்வநாதன் நன்றி தெரிவித்தாா். மேலும், முருகேசனின் நோ்மையான செயலை போக்குவரத்து ஊழியா்கள் பாராட்டினா்.