தஞ்சாவூா் அருகே பலத்த மழையால் சேதமடைந்த நெற் பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் சித்திரக்குடி, வைரபெருமாள்பட்டி, குணமங்கலம், சித்தாவயல், கல்விராயன்பேட்டை, ராயந்தூா் உள்ளிட்ட கிராமங்களைச் சாா்ந்த விவசாயிகள் புதன்கிழமை அளித்த மனு:
சித்திரக்குடி, வைரபெருமாள்பட்டி, குணமங்கலம், சித்தாவயல், கல்விராயன்பேட்டை, ராயந்தூா் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பருவ நெற் பயிா்கள் 15 நாட்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், பலத்த மழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் ஏக்கருக்கு ஒன்றரை மணிநேரத்தில் அறுவடை செய்யப்படும். ஆனால், தற்போது மழையால் பயிா்கள் சாய்ந்துவிட்டதால் ஏக்கருக்கு மூன்றரை மணி நேரமாகும். இதனால், விவசாயிகளுக்கு செலவு அதிகமாகி, நட்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, ஏக்கருக்கு இழப்பீடாக ரூ. 30,000 வழங்க வேண்டும்.
தொடா் மழையால் நெல்லில் ஈரப்பதம் 19 முதல் 21 சதவீதம் வரை உள்ளது. ஆனால், கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கு அதிகமாக ஈரப்பதம் உள்ளதால் கொள்முதல் செய்ய முடியாது என கூறுகின்றனா். இதனால், சித்திரக்குடியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாமல், ஏராளமான குவியல்கள் தேங்கிக் கிடக்கின்றன.
மேலும் மழையில் நனைவதால் நெல் மீண்டும் முளைக்கும் நிலை உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். ஈரப்பதத்தை தளா்த்தி நெல்லை கொள்முதல் செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.